Saturday 14 August 2010

சிதம்பரம் தெற்கு வாசல்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள்! நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது! அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது! ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல்! வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு! ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே!
இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும்? கோவில் நுழைவுப்போராகும்? புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.
இன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.
இந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.
கோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.
ஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.
ஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.
நல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா? போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான்? திரும்பி வந்தானா? சொந்த ஊர் திரும் பினானா? தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா? ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா? அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்? சாட்சாத் சேக்கிழார்!
இந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்!
விஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.
தீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, புராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.
இப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா? தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக! இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது!
இந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு? ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.
சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தி! அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.
இப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.
கோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.
இப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல்லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர்? அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.
நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா? தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா? இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.
பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.
நந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.
இதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்
(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை).

Saturday 7 August 2010

Bertolt Brecht
நவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் இப்ஸன், ஆகஸ்ற் ஸ்ற்றிட்போர்க் என்போருக்கு அடுத்தபடியாக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரெக்ட். முற்போக்கான சிந்தனையுடையவரான பிரெக்ட்டின் உலக நோக்கு 1920களின் நடுப்பகுதியில் மார்க்ஸியத்தின் வழிப்படலாயிற்று. அக்காலப்பகுதியில் வெளியான சாளி சாப்ளினின் “கோல்ட் ரஷ்” ஸெர்கெய் ஐஸென்ஸ்ற்றைனின் “போடெம்கின் போர்க்கப்பல்” எனும் திரைப்படங்கள் நாடகம் பற்றியும் சமூகம் பற்றியும் பிரெக்ட்டின் பார்வை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறப்படுகிறது.

பிரெக்ட்டின் நாடகங்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தனவோ அந்த அளவுக்கு அவை ஜெர்மன் ஃபாசிசவாதிகளான நாஜிகளின் வெறுப்பை சம்பாதித்தன. எனவே ஃபாசிசம் அதிகாரத்திற்கு வந்த பின்பு பிரெக்ட்டால் ஜெர்மனியில் வாழ முடியவில்லை. ஐரோப்பியாவினுள் புலம் பெயர்ந்து சுவீடனில் வாழ்ந்த பிரெக்ட் அதன் இறுதியில் ஜெர்மனி வட ஐரோப்பாவை கைப்பற்றிய கையோடு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார்.

ஐம்பத்து மூன்று நாடகத்தை எழுதிய பிரெக்ட்டின் மிகச்சிறந்த நாடகங்கள் உலகப்போர் காலத்திலேயே எழுதப்பட்டன. கலிலியோவின் வாழ்க்கை, தைரியத்தாய் (Mother Courage), ஷெச்சுவானின் நல்ல பெண்மணி, காக்கேசிய சுண்ண வட்டம், என்பன இன்றும் பேசப்படுவன.

உலகப்போரின் முடிவையொட்டி தொடங்கிய கெடுபிடிப் போரின் (cold War) போது, அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் அரசாங்க நடவடிக்கைகள் முனைப்பு பெற்றன. பிரெக்ட் ஒதுக்கப்பட வேண்டியோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டார். அமெரிக்க மக்களனைவரின் அமெரிக்கருக்குத் தகாத செயற்பாடுகள் குழு (Un-American Activities Committee) அவரை விசாரித்த்து. முதலில் தனது அரசியல் பற்றி எதுவுமே சொல்லமாட்டென் என்று அறிவித்த பிரெக்ட், அமெரிக்காவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பாமல் தான் கம்யூனிஸ்ட கட்சி உறுப்பினரல்ல என்று சாட்சியமளித்து, விடுவிக்கப்பட்டு, 1947 ல் ஐரோப்பாவிற்கு சென்று சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தார்.

மேற்கு வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜெர்மனியில், பழைய ஃபாசிசவாதிகள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டதையிட்டு வெறுப்படைந்த பிரெக்ட் பவேரியாவில் தன் ஊருக்கு திரும்பவில்லை. சோஷலிச கிழக்கு ஜெர்மனி அவருக்கு அழைப்பு விடுத்த்தையொட்டி 1949 முதல் இறக்கும் வரை ஜெர்மன் ஜனநாயக குடியரசின் குடிமகனாகவே வாழ்ந்தார். அவரது இறுதி ஆண்டுகளில் அடர் நாடகங்கள் எழுதாத போதும், நாடக இயக்கத்தை முன்னெடுப்பதிலும், புதிய தலைமுறையொன்றை உருவாக்குவதிலும் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். கற்பித்தலுக்கான நாடகங்கள் என்ற வகையில் மார்க்ஸிய சிந்தனையை முன்னெடுக்கும் குறு நாடகங்களையும் அவர் தயாரித்தார்.

பிரெக்ட் பற்றிய அவதூறுகள் சிலரால் இன்னமும் மேற்கில் பரப்பப்பட்டாலும், நவீன நாடகத்துறையில் அவருக்குரிய இடத்தை யாராலும் மறுக்க இயலாதுள்ளது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி என்று உறுதியுடன் கூறலாம். வழமையான நாடகத்துறையிலிருந்து அவர் ஏற்படுத்திய விலகல் முக்கியமானது. வழமையான நாடகங்கள் மேடை நிகழ்வுடன் அவையோர் ஒன்றிப் போவதையே நோக்கமாக்க் கொண்டிருந்த சூழலில், அவையோரை மேடை நிகழ்வினின்று தொலைவுபடுத்தி விலகி நிற்கச் செய்வதை பிரெக்ட்டின் “காவிய அரங்கு” முறை முதன்மைப்படுத்தியது. நாடகத்தின் நடுவே பாத்திரங்கள் அவையோரை விழித்து பேசுதல், பிரகாசமான மேடை ஒளி அமைப்பு, நாடகப் போக்கை இடைமறிக்கும் முறையில் புகுத்தப்படும் பாடல்கள் என்பன அந்த நோக்கஞ் சார்ந்த மேடை உத்திகள். விளக்கங்கூறும் விதமான சுலோக அட்டைகளைக் கூட பிரெக்ட் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பிரெக்ட் தனது நாடகச் சுவடிகளை தொடர்ந்து திருத்தங்கட்கு உட்படுத்தி வந்தார் என்பது நாடகம் பற்றிய அவரது அணுகுமுறைக்குரிய பண்பாகும்.

நன்மை வெல்லும் என்கிற விதமான நாடக முடிவுகளை பிரெக்ட்டிடம் காண்பது அரிது. தீமையும் அநீதியும் தான் வெல்லுகின்றன என்பதை காட்டுவதன் மூலம், நல்லதும் நீதியும் வேண்டுமாயின் உலகின் ஏற்கப்பட்ட நியதிகளை மாற்றவும் மறுக்கவும் வேண்டும் என்பதை பிரெக்ட் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவார்.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு குறிப்புகளை எழுதிய பிரெக்ட் அமெரிக்காவில் வாழ்ந்த ஏழாண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத் துறையால் முற்றாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். கலைஞன் அரசியலை விட்டு விலகி நின்றாலும், அரசியல் கலைஞனை விட்டு வைப்பதில்லை என்பதற்கு பிரெக்ட்டின் அமெரிக்க அனுபவம் ஒரு பயனுள்ள உதாரணம்.

பிரெக்ட் நாடகப்பிரதிகளை எழுதி, நாடகங்களை தயாரித்து Berliner Ensemble என்ற நாடகக் கம்பனியை அவரது இரண்டாவது மனைவியும் புகழ்பெற்ற நடிகையுமான ஹெலெனெ வைகெல் அவர்களுடன் சேர்ந்து நடத்தியவராவர். அதை விட நாடகம் பற்றிய கொள்கையை விருத்தி செய்ததிலும் அவருடைய பங்கு முக்கியமானது. நாடகவியல் பற்றி அவர் ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.

பிரெக்ட்டின் நன்கறியப்பட்ட இன்னெரு முகம் கவிதை சார்ந்தது. அவருடைய நாடகங்களில் வரும் பாடலகள் பலவும் கவித்துவம் மிக்கவை. அவற்றுக்கும் அப்பால் அவர் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார். இட்துசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைக்கட்கு முக்கியமானதொரு இடமுண்டு. கிழக்கு ஜெர்மன் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றை தவறாக கையாண்ட போது, பிரெக்ட் அதை விமர்சிக்க தவறவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் வைத்து பிரெக்ட்டுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் முரண்பாடு கற்பிக்கும் முயற்சிகள் இன்னமும் உள்ளன. பிரெக்ட் இறுதி வரை ஸ்டாலினினதும், சோவியத் ஒன்றியத்தினதும் நண்பனாகவே இருந்தார்.

கலை கலைக்காகவே என்ற கோஷத்தை நிராகரித்துக் கலைப் பண்பு குன்றாமல் அரசியல் தன்மை மிக்க ஆக்கங்களை உலகுக்கு வழங்கியவர் பிரெக்ட். சிங்கள நாடக இயக்கத்தின் எழுச்சி காலமான 1950 களின் பிற்கூற்றிற்கும், 1970 கட்குமிடையில், காக்கேசிய சுண்ண வட்டம், ஹுணு வட்டே கதாவ (சுண்ண வட்ட கதை) என்ற பேரில் தயாராகி வெற்றி பெற்றது. அக்கதை ஒரு குழந்தையின் மீதான உரிமை, பெற்றவளுக்கா, பேணி வளர்த்தவளுக்கா என்ற கேள்வியை எழுப்பி உழுபவனுக்கே நிலம் உடைமை என்ற நீதியை உணர்த்தி நின்றது.

கற்பித்தலுக்கான நாடகங்களில் ஒன்றான “விலக்கும் விதியும்” 1970 களில் ஈழத்தில் தமிழில் “யுகதர்மம்” என்ற பேரில் வர்க்க சமூகத்ஹ்டில் நீதியின் வர்க்க சார்பை உணர்த்தும் நாடகமாக வெற்றி பெற்றது. எனினும் தென்னாசியச் சூழலில் பிரெக்ட் பற்றிய அறிவும் அக்கறையும் மேலும் தேவை என்றே நினைக்கிறேன்.

கீழே காக்கேசிய சுண்ண வட்ட்த்தின் இறுதிக்காட்சியில் ஒரு பகுதியைத் தருகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் குழைந்தையை கைவிட்டு சென்றவளான ஒரு ஆளுநரின் மனைவிக்கும் குழந்தையைக் காப்பாற்றி தன் வறுமையின் நடுவே வளர்த்தெடுத்த மாளிகை பணிப் பெண் க்ருஷாவுக்குமிடையிலான வழக்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால் நீதிவானாக்கப்பட்ட அஸ்டாக்கின் முன்பு விசாரிக்கப்படுகிறது. அவ்வழக்கை எடுப்பதற்கு முன், இரு முதியவர்களின் மணமுறிவு வழக்கொன்றைப் பற்றிய தீர்ப்பை பின்னர் வழங்குவதாகக் கூறி விசாரணையை தொடர்கிறான். இப்போது க்ருஷாவை நோக்கிப் பேசுகிறான்.

அஸ்டாக் : (க்ருஷாவைத் தன்னிடம் அழைத்து, அவளை நோக்கி சற்று பரிவாக சரிந்தவாறு) உனக்கு நீதியைப் பற்றி கொஞ்சம் பரிவு இருப்பதை கவனித்தேன். இவன் உன் குழந்தையென்று நான் நம்பவில்லை. அப்படி அவன் உன் குழந்தையாக இருந்தால், பெண்ணே, நீ அவன் பணக்காரன் ஆவதை விரும்பமாட்டாயா? நீ மட்டும் அவன் உன் குழந்தை இல்லை என்று சொன்னால் அவனுக்கு ஒரு மாளிகையும் லாயங்களில் பல குதிரைகளும் அவன் வாசற்படிகளில் பல பிச்சைக்காரர்களும் அவனுக்கு பணியாற்ற படை வீர்ர்களும், அவனுடைய வீட்டு முற்றத்தில் பல மனுதாரர்களும் இருப்பர். இல்லையா? என்ன சொல்கிறாய்- இவன் பணக்காரனாவதை விரும்பவில்லையா?

Friday 19 March 2010

சிறந்த நகரங்கள்

நடப்பு 2010ம் ஆண்டிற்கான, வாழ்வதற்கு ஏற்ற சிறந்த நகரங்களின் பட்டியலை இந்திய தொழிலக கூட்டமைப்பும், இந்திய போட்டியியல் துறை பயிலகமும் இணைந்து தயாரித்துள்ளன. இதில் 37 நகரங்கள் இடம்பெற்றுள்ளன.இந்த பட்டியலில் பெங்களூர், கொல்கத்தா, ஐதராபாத், அகமதாபாத் ஆகிய நகரங்கள் முறையே 4, 5, 6, 7-வது இடங்களில் உள்ளன. ஜம்மு நகரம் 20வது இடத்தில் உள்ளது. பொருளாதார சூழ்நிலை, வாழ்க்கைத்தரம், சமூக கலாச்சார சூழல், கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதி, இயற்கை காட்சிகள், பொதுச்சேவை மற்றும் பொழுதுபோக்கு, சாலைப்போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு வசதிகள் எந்த அளவிற்கு உள்ளன என்ற அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பரிதாபாத், லூதியானா, லக்னோ, பாட்னா, விசாகப்பட்டினம் ஆகிய நகரங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன.

தனிப்பட்ட அம்சங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகளை அளிப்பதில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த கோழிக்கோடு, திருவனந்தபுரம், கொச்சி ஆகிய நகரங்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளன. இதில் மும்பை 12வது இடத்திலும், புதுதில்லி மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்கள் முறையே 17, 18வது இடங்களிலும் உள்ளன. அறிவுசார் தொழில்நுட்ப கல்வியில் புதுதில்லி, மும்பை, பெங்களூர், சென்னை, பூனா போன்ற நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன.

Thursday 18 March 2010

"ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்'

பழைய நாள்களில் சாமியார்கள் குளத்தங்கரைகளில் அரசமரத்தடியில் இருப்பார்கள். குளத்தில் குளித்து, உடல் முழுவதும் திருநீறு பூசிக்கொண்டு, ஓர் அன்னக்காவடியைத் தோளில் வைத்துக்கொண்டு, சித்தர் பாடல்களையும் தேவாரத்தையும் பாடிக் கொண்டு வீடுகளுக்கு முன்னால் வந்து நிற்பார்கள். வீட்டுப் பெண்கள் அவர்களுக்கு அரிசி போடுவார்கள். பொங்கித் தின்றுவிட்டு கோயில்களில் சாம்பிராணி போடுவது, மணி அடிப்பது போன்ற இறைப்பணிகளைச் செய்து கொண்டிருப்பார்கள். உடைமை எதுவும் இல்லாதவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆண்டிப் பண்டாரம் என்று பெயர். அவர்களுக்கு மதிப்புண்டு.

இன்று அதே ஆண்டிப் பண்டாரங்கள் காலத்திற்கேற்றவாறு ஆங்கிலம் பேசுகிறார்கள்; அமெரிக்காவுக்குப் போகிறார்கள்; நூற்றுக்கணக்கான ஏக்கரில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். "ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்' என்பதற்கு மாறாக "அத்தனைக்கும் ஆசைப்படு' என்று வேறு போதிக்கிறார்கள். விபூதிப் பைகளில் டாலர்களை வைத்திருக்கும் இவர்களுக்குச் செய்யும் சேவையை கோடம்பாக்கத்தில் சந்தையை இழந்துவிட்ட கோல மயில்கள் பகவத் சேவையாகவே நினைக்கிறார்கள். சாமி சமாதி நிலை அடையத் துணை புரிந்தால், போகிற கதிக்குப் புண்ணியமாவது கிடைக்காதா என்ற எண்ணம்தானாம்.

அன்றைக்குச் சாமியார்களிடம் இருப்பு இல்லை; ஆகவே வழக்குகளும் இல்லை. இன்று சாமியார்களின்மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் அத்தனை பிரிவுகளின் படியும் வழக்குகள் உண்டு. அதனாலென்ன? அரசுகளுக்கு விலையும் உண்டு; கொடுப்பதற்கு இவர்களிடம் இருப்பும் உண்டு.

Tuesday 16 March 2010

பி.டி.கத்தரியினால் தீயவிளைவுகள் ஏற்படும்

இந்தியாவில் 4000 வகை கத்தரி ரகங்கள் உள்ளன. நமது நாட்டில் ஆண்டு ஒன்றுக்கு 12 லட்சம் கோடி அளவுக்கு கத்தரி வியாபாரம் நடைபெறுகிறது. பி.டி.கத்தரிக்காயை, இந்தியாவில் பயிரிட முயற்சிப்பதன் மூலம் மேலைநாடுகள் புதிய தொழில்நுட்பத்தை பரிசோதித்து பார்க்கும் இடமாக இந்தியாவை மாற்ற முயற்சிக்கின்றன.ஒரு உணவுப்பொருளை எட்டு வகையான சோதனை செய்த பிறகே பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும். பி.டி கத்தரி விஷயத்தில் எந்தச் சோதனையும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த ரகம் அனுமதிக்கப்பட்டால் பாரம்பரிய விதைகள் காணாமல் போய்விடும்.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரியிலிருந்து விதை கிடைக்காது. இதைப் பயிரிட மான்சாண்டோ நிறுவனத்தை சார்ந்தே இருக்க வேண்டும். இக்கத்தரியினால் பல தீய விளைவுகள் ஏற்படும் என அறிவியல் அறிஞர்கள், நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்துகள் வந்துகொண்டிருக்கின்றன.

Saturday 13 March 2010

இரண்டு இந்தியா

உலகில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் நாடும் இந்தியா தான். அதிக ஏழைகள் வாழும் நாடும் இந்தியா தான்.தகவல்தொழில்நுட்ப வல்லுநர்கள் அதிகம் வசிக்கும் நாடும் இந்தியா தான். தகவல்தொழில்நுட்பத்தையே முற்றிலும் தெரியாத மக்கள் வசிக்கும் நாடும் இந்தியா தான்.

எந்த ஒரு துறையை எடுத்தாலும் இதுபோல இரண்டு இந்தியாவை நாம் காண முடியும். உலகிலேயே இந்தியாவில் தான் அதிகப் படிப்பறிவு இல்லாதவர்கள் இருப்பதாக அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது ஐ.நா.வின் துணை அமைப்பான யுனெஸ்கோ.

""கோயில்பூசை செய்வோர் சிலையைக் கொண்டு விற்றல்போலும்... வாயில் காத்து நிற்போர் வீட்டை வைத்து இழத்தல்போலும்...''

மக்களாட்சித் தத்துவத்துக்கும், தனிமனித சுதந்திரத்துக்கும் எதிரானதாக மிகவும் ரகசியமாக சில இந்தியாவின் வருங்காலத்தையே பாதிக்கும் உடன்பாடுகளுக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் தரப்பட்டிருப்பது நம்மிடமிருந்து மூடிமறைக்கப்பட்டிருக்கிறது.


விலைவாசி உயர்வு, நிதிநிலை அறிக்கைகள், இடைத்தேர்தல்கள் என்று அன்றாட நிகழ்வுகளை மட்டுமே தேசத்தை எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்னைகளைப் பற்றிச் சிந்திக்கும் ஊடகங்கள் மத்திய அரசின் முடிவுகளால் கேள்விக்குறியாகப்போகும் இந்திய விவசாயிகளின் வருங்காலத்தைப் பற்றிய கவலையே இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.


கடந்த வாரம் அமெரிக்காவுடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை வெளியில் தெரியாதவண்ணம் ஒப்புதல் வழங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கையொப்பமிடப்பட இருக்கும் விவசாயக் கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி விவசாய விரிவாக்கத்தில் தனியார்மயத்தைப் புகுத்துவதும் இந்திய வேளாண்மையில் அமெரிக்க விவசாயப் பன்னாட்டு நிறுவனங்கள் பங்குபெறுவதும் அனுமதிக்கப்பட இருக்கிறது.


அமெரிக்காவில் விவசாயம் என்பது வியாபாரம். இந்தியாவிலோ விவசாயம் என்பது வாழ்வாதாரம். இந்திய விவசாயி வியாபாரநோக்கில் தனது வயலில் உழுது பயிரிட்டு சாகுபடி செய்வதில்லை. தனது வயிற்றுப்பிழைப்புக்காக, வாழ்வாதாரமாக விவசாயத்தில்

ஈடுபடுகிறார். விவசாயம் லாபநோக்கில் நடத்தப்படவில்லை என காரணம் காட்டி விவசாய நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் மொத்தமாக வாங்கி லாபகரமாக விவசாயம் செய்ய வழிவகுப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.


மேலும், மரபணு மாற்றப்பட்ட விதைகளை அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனங்களின் உடைமையாகிவிட்ட நிலங்களில் பயிரிடுவதை யார் தடுக்க முடியும்? இந்திய-அமெரிக்க விவசாய அறிவுசார் அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதில் கர்க்கில், மான்சாண்டோ போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளை உற்பத்தி செய்யும் அமெரிக்க தனியார் பன்னாட்டு நிறுவனங்கள் உறுப்பினர்களாக இருக்க வழிகோலப்பட்டுள்ளது. இந்த அமைப்புகளில் இவர்கள் உறுப்பினர்களானால் நேரடியாகவே அரசின் மீது தங்களது செல்வாக்கைச் செலுத்துவது தவிர்க்க முடியாததாகிவிடும்.


ஒரு சர்வாதிகார ஆட்சியில்கூட நினைத்துப் பார்க்க முடியாத ஒரு ராட்சத சட்டத்தையும் இந்தப் பன்னாட்டு மரபணு மாற்றப்பட்ட விதைகளை விநியோகம் செய்யும் நிறுவனங்கள் நமது ஆட்சியாளர்களின் உதவியுடன் நம்மீது திணிக்க இருக்கிறார்கள். உயிரி தொழில்நுட்பவியல் ஒழுங்காற்று ஆணையச் சட்டம் ஒன்றை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்ற இருக்கிறது.

முறையான சாட்சியம் அல்லது விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில் அல்லாமல் மரபணு மாற்ற விதைகள் போன்ற புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள் பற்றித் தவறான பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களைத் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபடுவோர் மீது இந்தச் சட்டம் பாயும். இந்தச் சட்டமுன்வரைவின் 13(63) -வது பிரிவின்படி, புதிய அறிமுகங்களுக்கு எதிராகத் தக்க ஆதாரம் இல்லாமல் பிரசாரம் செய்பவர்கள் குறைந்தது 6 மாதம் முதல் ஓராண்டு சிறைத்தண்டனை பெறுவதுடன், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவார்கள்.


விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரித்தொழில்நுட்பவியல் துறையினரால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் இந்தச் சட்ட முன்வரைவின் 27(1) பிரிவின்படி, மரபணு மாற்றப்பட்ட பொருள்களின் ஆராய்ச்சி, அனுமதி போன்ற விஷயங்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் பார்வைக்கு உள்படுத்தப்படுவது மறுக்கப்படுகிறது. மேலும், மரபணு தொடர்பாக எந்தவொரு மாநிலத்தின் முடிவையும் நிராகரிக்கும் உரிமை உயிரித் தொழில்நுட்பவியல் துறையால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழுவுக்கு இருக்கும் என்கிறது இந்தச் சட்ட முன்வரைவு.


இப்போதல்லவா தெரிகிறது, பிரதமர் மன்மோகன் சிங் ஏன் மரபணு மாற்றப்பட்ட பொருள்கள் மீதான முடிவு தாற்காலிகமானதுதான் என்று அறிவித்தார் என்பது.


தனிமனித உரிமைக்கு, எதிர்ப்புக் குரல் எழுப்புவதற்கு இந்தியக் குடிமகனுக்கு உரிமை மறுக்கப்படும் அளவுக்கு நமது ஆட்சியாளர்களின் மரபணு மாற்றப்பட்டுள்ளது.


பஞ்சம் என்ற பூச்சாண்டி காட்டி வந்த பசுமைப்புரட்சி நமது மக்களையும் சூழலையும் கெடுத்துவிட்டது. இப்போது இரண்டாம் பசுமை புரட்சி என்ற மாயமானை ஏவியிருக்கிறது மான்சாண்டோ.மரபீனி தொழில்நுட்பம் மேலும் தீவிர வேதியல் பயன்பாடு பற்றி 2005 ஜூலையில் மன்மோகனும் புஷ்ஷும் கையெழுத்திட்டனர். தாய் பிறன் கைப்பட சகிப்பவனாகி நாயென வாழ்வோர் நமரில் இங்குளரோ ?

Friday 12 March 2010

பெண்களின் வளர்ச்சி

பெண்களுக்கு கல்வி, உடல்நலம், பொருளாதாரம் மற்றும் அரசியல் பங்கு இவற்றுக்கெல்லாம் சேர்த்து மொத்தம் ஒரு சதவீதத்துக்கும் குறைவாகத்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியான பங்கெடுப்பு, குறிப்பாக விழிப்புணர்வுத் திட்டங்களுக்கு 0.07 சதவீதமும், திறன் மேம்பாடு மற்றும் மகளிருக்கான வாய்ப்புகளை அதிகரித்தல் போன்றவற்றுக்கு 0.49 சதவீதமும் தான் ஒதுக்கப்பட்டுள்ளது.

2007-08ல், 410 ரூபாயாகவும், 2009-10ல் 1,000 ரூபாயாகவும், இப்போது அதில் 16 சதவீதம் அதிகரிக்கப்பட்டு, 1,190 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டில் பெண்களின் வளர்ச்சித் திட்டங்கள், கல்வி, உடல்நலம் போன்றவைக்கு எவ்வளவு ஒதுக்கப்படுகிறது என்பது குறித்து, "பட்ஜெட் மையம் மற்றும் அரசின் கடமை' (சி.பி. ஜி.ஏ.,) என்ற அமைப்பு ஓர் ஆய்வு நடத்தியுள்ளது.அதில், சராசரியாக ஒரு பெண்ணுக்கு ஆண்டுக்கு வெறும் 1,190 ரூபாய் மட்டுமே ஒதுக்கப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.

படிப்பறிவும் விழிப்புணர்ச்சியும்

இந்தியாவில் மொத்தம் 14 ஆயிரத்து 576 நீதிபதிகள் இருக்கின்றனர். ஆனால், தேவை 17 ஆயிரத்து 641. 10 லட்சம் பேருக்கு 10.5 நீதிபதிகள் என்ற விகிதத்தில்தான் நீதிபதிகளின் எண்ணிக்கை இருக்கிறது. சுப்ரீம் கோர்ட், 10 லட்சம் பேருக்கு 50 நீதிபதிகள் என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ணயித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் நிர்ணயம் 2030ல் தான் நடக்கும். ஆனால், அப்போது மக்கள் தொகை உயர்ந்துவிடும். தற்போது, ஒரு நீதிபதிக்கு, இரண்டாயிரத்து 127 வழக்குகள் என்ற விகிதத்தில், மொத்தம் நாடு முழுவதும், மூன்று கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இந்த வழக்குகளை முடிப்பதற்கு 320 ஆண்டுகள் தேவைப்படும்.

படிப்பறிவும் விழிப்புணர்ச்சியும் அதிகரிக்க அதிகரிக்க, வழக்குகளும் அதிகரிக்கின்றன என்று தெரியவந்துள்ளது. கல்வியில் முன்னணியில் உள்ள கேரளாவில் ஒரு ஆண்டுக்கு 1000 பேருக்கு 28 வழக்குகள் பதிவாகின்றன. ஆனால், கல்வியறிவில் பின்தங்கியுள்ள பீகாரில் 1000 பேருக்கு மூன்று வழக்குகள்தான் பதிவாகின்றன.

Thursday 11 March 2010

என்கவுன்டர்சாவு மனித உரிமை

1994 முதல் 2008}ம் ஆண்டு வரை இந்தியாவில் 16,836 காவல் சாவுகள் நடைபெற்றுள்ளன.÷தமிழகத்தில் 2006 முதல் 2010}ம் ஆண்டு வரை 22 என்கவுன்டர் சம்பவங்களில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தேசிய மனித உரிமை ஆணையம் தொடங்கப்பட்ட பின்னர் 1993}ம் ஆண்டில் 1,502 என்கவுன்டர்கள் பற்றிய தகவல்கள் காவல்துறையிடமிருந்து ஆணையத்துக்கு வந்துள்ளன. இதில் 12 சம்பவங்களில் போலியாகத் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, கொல்லப்பட்டோர் குடும்பத்துக்கு ஆணையம் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.


அதேநேரத்தில் இதுதொடர்பாக பொதுமக்களிடமிருந்து ஆணையத்துக்கு 1,262 புகார்கள் வந்துள்ளன. இவற்றில் 11 புகார்களில் உண்மை உள்ளதாகக் கண்டறிந்து, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தேசிய மனித உரிமை ஆணையம் அளித்துள்ள தகவல்படி 1993 முதல் 2009 வரை 23 போலி என்கவுன்டர்கள் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்கவுன்டர் சமயத்தில் குற்றவாளிகளுக்கும் போலீஸôருக்கும் மோதல் நடைபெறும்போது இதுவரை போலீஸôர் உயிரிழந்ததாக புள்ளிவிவரங்களே இல்லை.

ஒருசில என்கவுன்டர்களுக்குப் பின்னால் கிரிமினல்களுடன் தொடர்பு வைத்திருந்த அரசியல்வாதிகள் சிலருக்கு, பதவி உள்பட சகல வசதிகளுடனும் சுகபோக வாழ்க்கை கிடைக்கிறது என்பது மறைமுகமான செய்தியாகும். இதற்கு காவல்துறையினர் உடன்பட்டு உதவுவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது.

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட சூழ்நிலையிலும் மரண தண்டனை விதிக்கக் கூடாது என்பதை 135 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதைவிட கொடூரமான இந்த "என்கவுன்டர்' முறைஒழிக்கப்பட வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளின் வாதங்களில் எந்த அளவுக்கு நியாயம் உள்ளது என்பது விவாதத்துக்கு உள்படுத்த வேண்டிய பொருள்

முல்லைப் பெரியாறு அணை.

முல்லைப் பெரியாறு நதியின் மூலம் நெல்லை மாவட்டம், சிவகிரி சுந்தரவனப் பகுதியிலிருந்து வடக்கு முகமாக சேத்தூர், வத்திராயிருப்பு, கொடிக்குளம், சிங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், 1,830 மீட்டர் உயரத்தில் பெய்யும் மழையே முல்லைப் பெரியாறின் உற்பத்தி ஸ்தலம். ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டபொழுது, தன்னுடைய சொந்த முயற்சியில், பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேய நிர்வாகி இந்த அணையைக் கட்டி இம்மாவட்டங்களுக்கு அர்ப்பணித்தார்.

ஊடகங்கள நாகரிகம் கடைப்பிடிக்க வேண்டும்.

ஊடகங்கள் நாட்டில் நடைபெறும் அனைத்துச் செய்திகளையும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது அவசியமே. ஆனால், அதை எவ்விதம் கொண்டு செல்வது என்பதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். பலரும் ஆன்மிகச் சொற்பொழிவாளராக உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றி, அவரது எழுத்துகளை ஆராதித்து வரும் வேளையில், அவரது மோசமான அந்தரங்கம் வெளிப்பட்டுவிட்டது. அதை மக்கள் மத்தியில் கொண்டு போவதொன்றும் தவறான செயல் அல்ல என்பதுடன், மக்களும் திடீரென ஒருவர் மீது மாயை கொண்டு ஏமாறக்கூடாது என்பதற்காக இத்தகைய செய்திகள் அவசியம்தான் என்றாலும், அதை வெளிப்படுத்துவதிலும் ஒரு நாகரிகம் கடைப்பிடிக்கப்பட்டிருக்க வேண்டும். எந்த வாரப் பத்திரிகையை எடுத்தாலும் ஒவ்வொரு வாரத்திலும் ஒரு தகாத உறவினால் ஏற்பட்ட பிரச்னை மற்றும் நடிகைகளின், சில பிரமுகர்களின் அந்தரங்கம் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்கள் இல்லாமல் பத்திரிகை இல்லை என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் தொலைக்காட்சியின் அனைத்து விதமான சேனல்களில் ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் எனப்படும் நாடகங்களிலும் தவறாமல், ஒருவனுக்கு ஒருத்தி என்கிற தர்மம் மீறப்பட்டு உறவின் ஒழுக்கக்கேடு கண்டிப்பாக இடம் பெற்றால்தான் அந்தத் தொடர் மக்கள் மத்தியில் பேசப்படும், தொடர்ந்து பார்க்கப்படும் என்கிற நெறிமுறையும் ஏற்படுத்தப்பட்டு விட்டது. ஓராண்டுக்கு முன்னதாக சென்னை சட்டக்கல்லூரியில் நடைபெற்ற வன்முறை நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பாக காண்பிக்க முனைந்த நிருபர்கூட ஒரு மாணவர் மிக அதிகமான காயம்பட்டு ஒரு மரக்கிளையைப் பிடித்து எழ முடியாமல் திணறியபோது மனிதாபிமான முறையில் அவரைக் காப்பதைவிட படம்பிடிப்பதில் முனைப்பாக இருந்ததை மறந்திருக்க முடியாது.

தொலைக்காட்சியில்வெவ்வேறு பெயரில் ஒளிபரப்பும் நிகழ்வில்கூட கணவன், மனைவி, காதலன், காதலி ஊடலையும் நாசூக்காக சொன்ன அந்தக்காலப் பாடல்கள் இல்லாமல், பாடும் குழந்தையின் வயதுக்குச் சற்றும் பொருத்தமில்லாத இந்தக்கால கொச்சைப்படுத்தப்பட்ட காதல் பாடலை குழந்தைகள் பாடுவதை, பெற்றோர் அமர்ந்து ரசித்து மகிழ்ந்து, தாங்களும் தங்களின் குழந்தையும் தொலைக்காட்சியில் வந்ததை காலமெல்லாம் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்ற பெயரில் வக்கிரமும் ரசனையாகிப்போனதும் வருத்தமளிக்கிறது.

பத்திரிகைச் சுதந்திரம் போற்றப்பட வேண்டும், ஊடகங்களுக்குப் பாரபட்சமற்ற வகையில் செய்தியை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல சுதந்திரம் வேண்டும், மாறுபட்ட கருத்தில்லை. ஆனால் உறவின் மேன்மையை, வாழ்க்கை நெறிகளை பண்பாடுடன் கலந்து சொல்வதில் ஒழுக்கத்துடன் கூடிய சுதந்திரமாக அது நெறிப்பட வேண்டும்.

பெண்கள் Masotha

பெண்களுக்கு என்று எந்த ஓர் சலுகையும் ''கொடுமதி நிறைந்த'' ஆண் (?) கயவானிகள் விட்டுத்தர சம்மதிக்கவே மாட்டார்கள் என்று.. இதில் சிலர் நல்ல வேஷம் கட்டி நடிக்கவும் செய்கின்றனர்.. ஒரு சிலர் வேறு வழி இல்லாமல் அரசியல் ''நிர்பந்தம் காரணமாய்'' ஆதரிக்கவேண்டிய சூழ்நிலையால்..உதாரணம் நம்ம மஞ்ச துண்டார்.. அடுத்து ஒதுக்கீடில் உள் ஒதுக்கீடாம்.. சிறுபான்மையினருக்காக என்கிற முகமூடியை அணிந்துகொண்டு எதிர்ப்பார்..உதாரணம் நம்ம ''முலாயம்'' அடுத்து ''பிற்படுத்த பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் என்கிற முகமூடியணிந்து..உதாரணம் நம்ம ''லொள்ளு'' லாலு.. என்னமோ இவர்கள் தான் அவர்களுக்கு பாதுகாவலன் என்று ''பீத்திக்க'' துடிக்கின்றனர்.. இவர்களின் இந்த துடிப்பு (!) இந்த அறுபது ஆண்டுகளில் எந்த முன்னேற்றத்தை சிறுபான்மையிருக்கும் தாழ்த்தப்பட்டோற்கும் கொண்டு வந்தது ??பொய் வேஷம் கட்டி புளுகு அறிக்கை விட்டு இன்னும் எத்தனை நாளைக்கு நீங்கள் பெண்களுக்கு எதிராய் இருந்துவிடப்போகிரீர்கள் வெட்கம்கெட்ட மனிதர்களே?

Wednesday 10 March 2010

பி.டி. பருத்தியால் கடும் இழப்பு; ஆந்திர விவசாயிகள் போர்க்கொடி

மான்சான்டோ, மகிகோ நிறுவனங்கள் விற்ற மரபணு பருத்தி விதைகளால் விளைச்சல் இல்லாமல் போனதால் கடனாளியாகி விட்டோம் என்று ஆந்திர விவசாயிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மான்சான்டோ விதை நிறுவனம் இந்திய விவசாயிகளுக்கு மரபணு பயிர் விதைகளை விற்பனை செய்ய முடிவு செய்தது. இந்த மரபணு பயிர்களை பயிரிட்டால் விளைச்சல் அமோகமாக இருக்கும். பூச்சிகள் தாக்காது என்று அந்நிறுவனம் கூறியது.

இதையடுத்து மத்திய அரசு முதன் முதலாக மரபணு (பி.டி.) பருத்தி பயிரிட அனுமதி அளித்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் இந்த மரபணு பருத்தி விதைகளை மான் சாண்டோ, மகிகோ ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அதிக விலை கொடுத்து வாங்கி விதைத்தனர்.

ஆனால் அந்த மரபணு பருத்தியை பூச்சிகள் தாக்கியதால் விளைச்சல் சுத்தமாக இல்லாமல் போனது. இதனால் கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இது குறித்து ஆந்திர விவசாயிகள் சங்கம் தெரிவிக்கையில்:

"மான் சான்டோ, மகிகோ போன்ற மரபணு விதை நிறுவனங்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்று எங்களை ஏமாற்றி மரபணு பருத்தி விதைகளை அதிக விலைக்கு விற்றன. ஆனால் விளைச்சல் இல்லாததால் நாங்கள் கடனாளியாக மாறி விட்டோம். மரபணு பருத்தி பயிரிட்ட நிலத்தில் வேறு பயிர்களை பயிரிட்டோம். அதுவும் விளையவில்லை.

இதுபற்றி நாங்கள் வேளாண்மை விஞ்ஞானி களிடம் கேட்டபோது, மரபணு பயிர்களை விளை வித்த நிலத்தில் வேறு இயற்கையான பயிர்கள் விளைவிக்க முடியாது. அப்படியே அதில் பயிரிட்டாலும் விளைச்சல் இருக்காது. மரபணு பயிர்களை பயிரிடும் நிலத்தில் உள்ள நன்மை செய்யும் புழுக்கள் அழிந்து விடும். இதனால் அந்த நிலம் தரிசு நிலமாக மாறி விடும் என்று எங்களிடம் கூறினார்கள்.

இதுபற்றி நாங்கள் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மத்திய அரசு தற்போது மரபணு அரிசி, வெண்டைக்காய், முட்டைக்கோஸ் போன்றவற்றுக்கு அனுமதி அளிக்க இருப்பதாக அறிந்தோம். மத்திய அரசு அனுமதி அளித்தாலும் நாங்கள் ஆந்திராவில் மரபணு பயிர்களை பயிரிட அனுமதிக்க மாட்டோம்.

இந்திய இயற்கை விவசாயத்தை அடியோடு அழிக்க நினைக்கும் மான்சான்டோ போன்ற சர்வதேச விதை நிறுவனங்களின் சதி செயலுக்கு மத்திய அரசு துணை போகக்கூடாது.

மரபணு செடிகளை ஆடு மாடு மேய்ந்தால் உடனே இறந்து விடும் அபாயம் உள்ளது."

என்று அவர் கூறினார். நன்றி:தமிழ் வெப்துனியா 10.3.2010 ஆன்மீகக்கடலின் கருத்து:
உலகின் மிக மோசமான பிராடு நிறுவனம் மான்சாண்டோ என்ற பெயரை கி.பி.1980களில் அமெரிக்காவிலேயே வாங்கிவிட்டது.அந்த நிறுவனத்தின் அக்குளில் நமது மத்திய அரசு அதிகாரிகளும்,மத்திய அமைச்சர்களும் இருக்கிறார்களோ? கடந்த சில ஆண்டுகளில் 1,00,000 விவசாயிகள் தற்கொலைக்குக் காரணமான இந்த நிறுவனத்தை ஏன் இந்திய அரசு விட்டுவைத்திருக்கிறது? இரண்டாவது (பொருளாதார) சுதந்திரப்போர் உண்டானப்பிறகுதான் மத்திய அரசுக்கு சுயபுத்தி வருமா?

Saturday 6 March 2010

நிறுவனங்கள் செய்வது நில அபகரிப்பா?

இந்தியாவின் சிறந்த நிறுவனங்களாக கருதப்படும் இன்போசிஸ் விப்ரோ போன்ற நிறுவனங்கள், மாநில முதல்வர்களை பார்த்து 500 ஏக்கர் நிலம் வேண்டும் , 700 ஏக்கர் நிலம் வேண்டும் என்று கேட்பது அன்றாட வாடிக்கையாக போய்விட்டது .


இது தவிர, இப்போதெல்லாம் சிறப்பு பொருளாதார மண்டலம் SEZ என்ற கூத்து வேறு , இது பற்றி வேறு பதிவில்.

ஒரு கேள்வி, சுலபமான கேள்வி தான் , 200- 300 ஏக்கர் நிலத்தை என்ன செய்யப்போகிறாகள்? இந்திய நிறுவனங்கள் தங்களை தொழில்நுட்பத்தில் சூரப்புலிகள் என்று கருதிக்கொண்டிருக்கின்றன , அந்த tech savvy தனந்தை கட்டடக்கலையிலும் காட்டலாம்.

1 இலட்சம் பேர் வேலை செய்ய வசதியாக ஐந்து 20 மாடி கட்டிடங்களை கட்டினால் போதும், 20 - 25 ஏக்கரில் வேலை முடிந்துவிடும். பெங்களுர் ITPL வெறும் 70 ஏக்கரில் சிறப்பாக இயங்குகிறது. 20 லட்சம் சதுர அடிக்கு கட்டிடம் இருக்கிறது. சுலபமாக 20000 பேரை தாங்கும்.

இப்படி எளிய வழி இருக்கையில் ஏன் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலம் கேட்கிறார்கள் ?
பலர் சொல்வது போல் கம்பனிகள் நில அபகரிப்பில் (land grab) ஈடுபட்டுள்ளனவா?