Saturday 14 August 2010

சிதம்பரம் தெற்கு வாசல்

சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புற வாசலைத் திறந்துவிடச் சொல்லி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் அங்கு நடைபெற்ற எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை தொலைக்காட்சி மூலம் கண்டபோது மனம் மகிழ்ச்சியால் துள்ளியது. சில ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்று அந்தச்சுவரைப் பார்த்து ஆவேசப் பெருமூச்சு விட்ட வர்களில் நானும் ஒருவன்.
சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் வரும் நந்தன் கதையைப் படித்து விட்டு, அவன் வாழ்ந்த பகுதிகளை நேரில் சென்று பார்க்க ஆசைப்பட்டேன். அவன் பிறந்த மேற்கானாட்டு ஆதனூர் போனேன். அவன் வழிபட்ட திருப்புன்கூர் போனேன். அங்கே அவன் வெட்டிய குளத்தைப் பார்த்தேன். அங்கிருந்து சிதம்பரம் வந்தவன், நடராஜர் கோவிலின் தென்புற வாசல் வழியாக நுழைந்தேன். அங்கே அடுத்த பிரகாரத்தை சுவர் வைத்து அடைத்திருந்தார்கள்! நந்தன் நடந்த பாதை அந்த அளவில் மூடப்பட்டது! அவன் நடந்த பாதை வழியாக இப்போது நம்மால் நடராஜர் சன்னதிக்குப் போக முடியாது! ஏனென்றால் அன்று நந்தன் செய்தது மீறல்! வருணாசிரமவாதிகளின் தடையை மீறி அவன் நடத்திய கோவில் நுழைவு! ஆம், தமிழகத்தில் முதன்முதலாகக் கோவில் நுழைவுப் போராட்டம் நடத்தியவன் நந்தனே!
இப்படிச் சொல்லும்போது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும். அவனைத்தான் எரித்துவிட்டார்களே, அதற்குப்பிறகு அரூப வடிவில்தானே கோவிலுக்குள் நுழைந்தான். அது எப்படி மீறலாகும்? கோவில் நுழைவுப்போராகும்? புராணமயப்படுத்துதல் என்பது நடந்தவற்றை ஆதிக்கவாதிகள் தங்களது வசதிக்கு ஏற்ப அதீதப்புனைவு செய்வதாகும். அவர்கள் யதார்த்தத்தை அமானுஷ்ய கற்பிதத்தால் மூடிவைப்பார்கள். பகுத்தறிவு கொண்டு அந்த மூடியைத் திறந்து பார்த்தால்- அதாவது கட்டுடைத்துப் பார்த்தால்- யதார்த்தம் மீண்டும் வெளிப்படும்.
இன்றைக்குச் சுமார் ஆயிரத்துநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் சுந்தரர். இவர் பாடிய திருத்தொண்டத் தொகையில்தான் முதன்முதலாக நந்தன் பற்றிய குறிப்பு வருகிறது. செம்மையே திருநாளைப் போவார்க்கும் அடியேன் என்கிற ஒற்றை வரி அது. இன்றைக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் நம்பியாண்டார் நம்பி. இவர் பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் நந்தன் பற்றி நான்கு வரிகள் உள்ளன. அதில்தான் அவன் பிறந்த ஊர் ஆதனூர் என்பதும், பிறந்த சாதி புலையர் என்பதும் வருகிறது.
இந்த ஐந்து வரிகளை வைத்துக் கொண்டு மட்டும் சேக்கிழார் அவ்வளவு விரிவாகப் புராணம் பாடியிருக்க முடியாது. நந்தனைப் பற்றிய நினைவுகளைச் சுமந்து நின்ற நாட்டுப்புற இலக்கியங்கள் மக்கள் மத்தியில் இருந்திருக்க வேண்டும். அவற்றைத்தான் புராணமயப்படுத்தியிருக்கிறார் சேக்கிழார். அப்படியும் நடந்த உண்மைகளை முழுசாய் மறைக்க முடியவில்லை.
கோவில் என்றாலே அந்தக்காலத்தில் சிதம்பரத்தைக் குறித்தது. அந்த அளவுக்கு சைவ சமயத்தவர் அதன் பெருமை பேசி வந்தார்கள். இதைக் கேள்விப்பட்ட நந்தனுக்கு சித்தமொடுத் திருத்தில்லைத் திருமன்று சென்று இறைஞ்ச ஆசை பிறந்தது என்கிறார் சேக்கிழார். அதாவது கோவிலுக்குள் சென்று திருமன்று தரிசிக்க - சன்னிதானத்தை தரிசிக்க- ஆசை பிறந்தது. ஆனால் அது கூடாத ஆசை, ஆகாத ஆசை. ஒன்றியனே தருதன்மை உறுகுலத்தோடு இசை வில்லை என்று அந்த ஆசை தனது குலத்திற்குப் பொருந்தாது என்று- அவனே நினைத்துக் கொண்டதாகவும் சேக்கிழார் கூறுகிறார்.
ஆசைக்கும் இயலாமைக்கும் இடையில் கிடந்து அல்லல்பட்டு, பின்னர் ஆசை மீறி நாளை போவேன் என்று தனக்குத்தானேயும், பிறரிடமும் சொல்லிக்கொள்வான். இதுவே அவனுக்குப் பட்டப்பெயராகிப் போனது. அந்தப் பெயராலேயே சுந்தரரும், நம்பியாண்டார் நம்பியும் அவனை அழைத்திருக்கிறார்கள். சேக்கிழாரும் அப்படியே சொல்லியிருக்கிறார்.இதிலிருந்து நந்தனின் நோக்கமும் திட்டமும் கோவிலுக்குள் நுழைவதாக இருந்தது என்பது நிச்சயமாகிறது.
ஒருநாள் ஆதனூரை விட்டுக் கிளம்பி சிதம்பரம் வந்து சேர்ந்தான். ஆனால் கோவிலுக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கட்டுத்திட்டம். என்ன செய்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். இந்த இடத்தில்தான் சேக்கிழார் தனது அமானுஷ்ய கற்பிதத்தைச் சேர்க்கிறார். சிவபெருமானே நந்தனின் கனவில் வந்து இப்பிறவி போய் நீங்க எரியினிடை நீ மூழ்கி முப்புரிநூல் மார்பருடன் முன் அணைவாய் என்றாராம். அவனது கனவில் மட்டுமல்ல தில்லை மூவாயிரவர் ஒவ்வொருவருடைய கனவிலும் போய்ச் சொன்னாராம். அவர்களும் வேறு வழியின்றி வெய்ய தழல் அமைத்து தந்தார்களாம். அந்தத் தீக்குண்டத்தில் நந்தன் இறங்கினானாம். பின்னர் இம்மாயப் பொய்தகையும் உரு ஒழித்துப் புண்ணியமாம் முனி வடிவாய் மெய்நிகழ் பெண்ணூல விளங்க மீண்டும் எழுந்தானாம்.
நல்லது. எழுந்தவன் என்ன ஆனான் அவனுக்கு கிடைத்த புது உருவத்தோடு கோவிலுக்குள் போனானா? போனான். நல்லது. அதற்குப் பிறகு என்ன ஆனான்? திரும்பி வந்தானா? சொந்த ஊர் திரும் பினானா? தனக்கு கிடைத்த சிதம்பர தரிசனம் பற்றி தன் மக்களுக்குச் சொன்னானா? ஆதனூரில் மகிழ்வோடு வாழ்ந்தானா? அதெல்லாம் தெரியாது. யாருக்கும் தெரியாது. சொன்னவர் யார்? சாட்சாத் சேக்கிழார்!
இந்த உச்சகட்டப் பாடலை நோக்குங்கள்- தில்லைவாழ் அந்தணரும் உடன் செல்லச் சென்று எய்திக்/கொல்லை மான் மறிக்கரத்தார் கோபுரத்தைத் தொழுதி இறைஞ்சி/தில்லைபோய் உட்புகுந்தார் உலகுய்ய நடமாடும்/எல்லையினைத் தலைப்பட்டார் யாவர்க்கும் கண்டிலரால் புது உருவெடுத்தவர் கோபுர தரிசனத்தோடு நிற்கவில்லை. நெல்லை போய் உட்புகுந்தார்-கோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டார். போனவர் உல குய்ய நடமாடும் எல்லையினைத் தலைப்பட்டார் அதாவது நடராஜமூர்த்தியை அடைந்துவிட்டார். அதற்குப் பிறகு யாரும் அவரைக் கண்டிலர்!
விஷயம் தெளிவாகிறது. எரியுண்ட பிறகு ஒரு மனிதர் புதுவடிவம் எடுத்தார் என்பது அறிவுக்குப் பொருந்தாத விஷயம். உண்மையில் விஷயம் தலைகீழாக இருந்திருக்க வேண்டும். அதாவது, தீயில் புகுந்து வந்து கோவிலுக்குள் போகவில்லை. கோவிலுக்குள் தடாலடியாக நுழைந்ததால் தீக்குள் புகுத்தப்பட்டான் நந்தன். இதுவே நடந்திருக்கக் கூடியது. அதனால்தான் நந்தன் நடத்தியது கோவில் நுழைவுப்போராட்டம் என்கிறோம்.
தீண்டப்படாதோர் எனப்பட்டோர் இப்படி தர்மசாத்திர விதிமுறைகளை மீறினால் அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள். அப்படிச் செய்யப்படலாம் என்று அந்த தர்ம சாதிரங்களே வகுத்துள்ளன. அப்படி நந்தன் எரித்துக் கொல்லப்பட்டிருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. வருணாசிரமவாதிகள் காட்டிய ஒரே சலுகை அவனையும் நாயன்மார்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்லி, புராணம் புனைந்து அந்த மக்களைச் சாந்தப்படுத்தியது.
இப்படி நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்தது தென்புற வாசல் வழியாகத்தான். இதற்கு அசைக்க முடியாத ஆதாரம் பெரிய புராணத்திலேயே உள்ளது. நந்தனை எரியூட்ட தீக்குண்டம் - ஹோமக்குண்டம்- எங்கு அமைக்கப் பட்டது தெரியுமா? தென்திசையின் மதில்புறத்துப் பிறை உரிஞ்சும் திருவாயிலின் முன்னாக என்கிறார் சேக்கிழார். அதாவது, தென்திசையின் திருவாயில் முன்பாக! இப்போதும் ஓமக்குளம் எனப்படுவது கோவிலுக்குத் தென்திசையில்தான் உள்ளது!
இந்தத் தென்புற வாசலைத்தான் சுவர் எழுப்பி அடைத்துவிட்டார்கள் கோவில் நிர்வாகத்தார். இதற்கு என்ன காரணம் இருக்க முடியும்? நந்தன் நுழைந்த வாசல் என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? தீண்டாமை வெறியானது காலந்தோறும் எழுந்தும், தணிந்தும், எழுந்தும் வந்துள்ளது. ஆட்சி மாற்றங்கள், புதிய மதங்களின் வருகை என்று பல விதமான தாக்கங்களுக்கு மத்தியில் அது செயல்பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அந்தத் தென்புற வாசல் திறந்துதான் இருந்தது. இன்னொரு கட்டத்தில் அது அடைக்கப்பட்டது. இப்போதும் கோவிலின் உள்புறம் அங்கே வாசல் இருந்ததற்கு அடையாளமாக ஒரு பெரிய மரக்கதவு உள்ளது. மரக்கதவுக்குள் கைவிட்டு தட்டிப்பார்த்தேன் தடுப்புச்சுவர் இருந்தது. சுவருக்கு எதற்கு மரக்கதவு? ஆக சுவர் இடையிலே எழுந்திருக்கிறது. தீண்டாமை வெறி அதிகமான ஒரு கட்டத்தில் எழுந்திருக்கிறது.
சிதம்பரம் நடராசர் கோவிலுக்குச் சற்றுத் தொலைவில் நந்தனுக்குத் தனிக்கோவில் இருக்கிறது. இதைக் கட்டியவர் சகஜானந்தர் என்கிற பஞ்சமர்குலத் தலைவர். இவர் காங்கிரஸ் இயக்கத்திலும் தீவிரமாக இருந்தவர். இந்தக் கோவிலுக்கு 1934ல் அடிக்கல் நாட்டியவர் யார் தெரியுமா? மகாத்மா காந்தி! அதற்கான கல்வெட்டு அங்கே உள்ளது.
இப்படித் தனிக்கோவில் எழுந்ததற்குக் காரணம் என்று அங்கிருந்த ஒரு பெரியவர் என்னிடம் சொன்னது - சிதம்பரம் நடராஜர் கோவிலின் தென்புறவாசல் அருகே நந்தனாருக்குச் சன்னதி உள்ளது. அங்கும் இப்படி நந்தனார், நடராஜர் சிவகாமியோடு காட்சியளிக்கிறார். ஒரு பஞ்சமர் குலத்தவருக்கு தனிச் சன்னதியா என்று அதைச் சுவர் வைத்து அடைத்துவிட்டார்கள். இது வெளிவாசலுக்கு ஏற்பட்ட கதி. இந்தச் சன்னதியின் உள்வாசல் கோவிலுக்குள் நடனசபைக்கு அருகே உள்ளது. அதையும் அடைத்து விட்டார்கள். மரக்கதவு போட்டுப் பூட்டி விட்டார்கள். இந்தக்கொடுமையை எதிர்த்தார் சகஜானந்தர். நந்தனார் சன்னதியைத் திறந்துவிடவேண்டும் என்று தில்லை மூவாயிரவராகிய தீட்சதர்களுடன் வாதாடினர். அவர்கள் கேட்கவில்லை. அதனால்தான் நந்தனார் தீப்புகுந்த ஓமக்குளத்துக்கு அருகே இப்படியொரு போட்டிக்கோவிலை உருவாக்கினார்.
கோவில் இப்போது தமிழக அரசு நிர்வாகத்தின் கீழ் வந்துவிட்டது. தென்புற வாசலை அடைத்துக்கொண்டிருக்கும் அந்தச்சுவரைக் கலைஞர் அரசு அகற்ற வேண்டும். அது இரண்டு விஷயங்களைத் தீர்த்து வைக்கும். ஒன்று, நந்தன் நுழைந்த வாசல் என்கிற காரணத்தால்தான் அப்படிச்சுவர் வைத்து அடைக்கப்பட்டது என்று மக்கள் நெஞ்சில் காலங்காலமாக இருந்து வரும் காயம்-அந்தச் சரித்திர ரணம் ஆறிப்போகும். இரண்டு, அங்கே நந்தனுக்கு ஏற்கெனவே தனிச்சன்னதி இருக்குமேயானால் அதுவும் மக்களின் வழிபாட்டுக்கு வரும். கோவிலுக்குள்ளும் சமத்துவபுரம் உருவாகும்.
இப்படியொரு சமத்துவத்தை உருவாக்கத் தனது ஆட்சியில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்த அந்தச்சுவற்றை அகற்று வதற்குப் பதிலாக போராட்டக்காரர்களைக் கேலி செய்திருக்கிறார் முதல்வர் கலைஞர். நந்தனார் இருந்தாரா இல்லையா என்று பெரியாரைத்தான் கேட்க வேண்டும என்கிறார். பெரிய புராணத்தில் வரும் நாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர், காரைக்காலம்மையார், தில்லைவாழ் அந்தணர்கள் எல்லாம் இருந்தார்களா, இல்லையா என்பது பற்றியும் இப்படிச் சந்தேகத்தைக் கிளப்புவாரா கலைஞர்? அவ்வளவுதான் சைவப் பண்டிதர்கள் இவரைப் பிடிபிடியென்று பிடித்துவிடுவார்கள். அவர்கள் எல்லாம் வாழ்ந்தது உண்மை என்றால், நந்தன் வாழ்ந்ததும் உண்மைதான். அதுமட்டுமல்ல, நந்தன் பிறந்த, நடமாடிய ஊர்கள் எல்லாம் அதே பெயரில் இப்போதும் உள்ளன. அந்தத் தில்லைவாழ் அந்தணர்களின் வாரிசுகள் என தீட்சதர்களும் இருக்கிறார்கள்.
நந்தன் சிதம்பரம் கோவிலுக்குள்ளேயே போகவில்லை என்கிறார் முதல்வர் கலைஞர். சேக்கிழாராவது புதிய உருவத்தில் உள்ளே போனான் என்று பாடியிருக்கிறார். சோழனின் அன்றைய முதலமைச்சராவது அந்த அளவுக்கு உண்மையை ஒப்புக்கொண்டார். தமிழகத்தின் இன்றைய முதலமைச்சரோ அவன் உள்ளே போகவேயில்லை என்று அடித்து விடுகிறார். உள்ளே போனான், அதனால்தான் தீட்டு என்று சொல்லி வாசலை அடைத்தார்கள் எனச் சொல்லுகிறவர்களைக் கிண்டலும் கேலியும் செய்திருக்கிறார். போனதைப் பார்த்தவர்கள் இல்லை என்கிறாரே, போகாததை உறுதி செய்ய இவர் மட்டும் என்ன அந்தக் காலத்தில் வாழ்ந்தவரா? தான் போகவில்லை என்று நேரே இவரிடம் வந்து வெற்றிலை பாக்கு வாங்கிப் போட்டுக் கொண்டு நந்தன் சொன்னானா? இப்படியெல்லாம் கேட்க நம்மாலும் முடியும் என்பதை முதல்வர் உணரவேண்டும்.
பெரியாரின் சீடர், அண்ணாவின் தம்பி என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் கலைஞர், வருணாசிரமவாதிகளின் வறட்டு வக்கீலாக மாறக்கூடாது. எந்தவொரு போராட்டத்தையும் அரசுக்கு எதிரானதாகப் பார்த்து எரிச்சல் அடையக்கூடாது. இது ஜனநாயக நாடு. பல கோரிக்கைகளும், அவற்றுக்கான போராட்டங்களும் எழத்தான் செய்யும். அவற்றின் நியாயத்தன்மை குறித்தே முதலில் யோசிக்க வேண்டும். அதுவே ஒரு ஆட்சியாளருக்கு அழகு.
நந்தன் பற்றி சேக்கிழார் பாடியதை கலைஞர் மீண்டும் படிக்கட்டும். அது பற்றிய புதிய ஆய்வுகளைத் தேடிப்பெறட்டும். அவரது கூட்டணியில் உள்ள திருமாவளவன் இந்தச்சுவரை அகற்றச் சொல்லி முன்பு போராட்டம் நடத்தினார். ஆகவே, அவரிடமும் இதுபற்றிக் கேட்கட்டும். போராட்டத்திற்கு ஆதரவாக விடுதலையில் தலையங்கம் வந்திருக்கிறது. அவர்களிடமும் கேட்கட்டும்.
இதை விடுத்து ஆத்திரப்பட்டு வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். அதுவும் தாழ்த்தப்பட்டோரின் அந்நாளைய, இந்நாளையத் தலைவர்களைப் பற்றிப் பேசும் போது மேலும் நிதானம் வேண்டும். வருணாசிரமம் எனும் கொடூர சமூக ஆயுதத்தால் சித்ரவதைக்கு ஆளானவர்கள் அவர்கள். அந்த வலி இன்னும் இருக்கிறது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்ச வேண்டாம்
(தீக்கதிர் நாளேட்டில் தோழர் அருணன்,தலைவர்,தமுஎகச எழுதிய கட்டுரை).

Saturday 7 August 2010

Bertolt Brecht
நவீன ஐரோப்பிய நாடக உலகில் ஹென்றிக் இப்ஸன், ஆகஸ்ற் ஸ்ற்றிட்போர்க் என்போருக்கு அடுத்தபடியாக முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியவர் பிரெக்ட். முற்போக்கான சிந்தனையுடையவரான பிரெக்ட்டின் உலக நோக்கு 1920களின் நடுப்பகுதியில் மார்க்ஸியத்தின் வழிப்படலாயிற்று. அக்காலப்பகுதியில் வெளியான சாளி சாப்ளினின் “கோல்ட் ரஷ்” ஸெர்கெய் ஐஸென்ஸ்ற்றைனின் “போடெம்கின் போர்க்கப்பல்” எனும் திரைப்படங்கள் நாடகம் பற்றியும் சமூகம் பற்றியும் பிரெக்ட்டின் பார்வை மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின என்று கூறப்படுகிறது.

பிரெக்ட்டின் நாடகங்கள் எந்த அளவுக்கு மக்களை கவர்ந்தனவோ அந்த அளவுக்கு அவை ஜெர்மன் ஃபாசிசவாதிகளான நாஜிகளின் வெறுப்பை சம்பாதித்தன. எனவே ஃபாசிசம் அதிகாரத்திற்கு வந்த பின்பு பிரெக்ட்டால் ஜெர்மனியில் வாழ முடியவில்லை. ஐரோப்பியாவினுள் புலம் பெயர்ந்து சுவீடனில் வாழ்ந்த பிரெக்ட் அதன் இறுதியில் ஜெர்மனி வட ஐரோப்பாவை கைப்பற்றிய கையோடு அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தார்.

ஐம்பத்து மூன்று நாடகத்தை எழுதிய பிரெக்ட்டின் மிகச்சிறந்த நாடகங்கள் உலகப்போர் காலத்திலேயே எழுதப்பட்டன. கலிலியோவின் வாழ்க்கை, தைரியத்தாய் (Mother Courage), ஷெச்சுவானின் நல்ல பெண்மணி, காக்கேசிய சுண்ண வட்டம், என்பன இன்றும் பேசப்படுவன.

உலகப்போரின் முடிவையொட்டி தொடங்கிய கெடுபிடிப் போரின் (cold War) போது, அமெரிக்காவில் கம்யூனிஸ்டுகளை வேட்டையாடும் அரசாங்க நடவடிக்கைகள் முனைப்பு பெற்றன. பிரெக்ட் ஒதுக்கப்பட வேண்டியோர் பட்டியலில் உள்ளடக்கப்பட்டார். அமெரிக்க மக்களனைவரின் அமெரிக்கருக்குத் தகாத செயற்பாடுகள் குழு (Un-American Activities Committee) அவரை விசாரித்த்து. முதலில் தனது அரசியல் பற்றி எதுவுமே சொல்லமாட்டென் என்று அறிவித்த பிரெக்ட், அமெரிக்காவில் தொடர்ந்தும் தங்கியிருக்க விரும்பாமல் தான் கம்யூனிஸ்ட கட்சி உறுப்பினரல்ல என்று சாட்சியமளித்து, விடுவிக்கப்பட்டு, 1947 ல் ஐரோப்பாவிற்கு சென்று சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்தார்.

மேற்கு வல்லரசுகளின் கட்டுப்பாட்டிலிருந்த மேற்கு ஜெர்மனியில், பழைய ஃபாசிசவாதிகள் முக்கிய பதவிகளில் அமர்த்தப்பட்டதையிட்டு வெறுப்படைந்த பிரெக்ட் பவேரியாவில் தன் ஊருக்கு திரும்பவில்லை. சோஷலிச கிழக்கு ஜெர்மனி அவருக்கு அழைப்பு விடுத்த்தையொட்டி 1949 முதல் இறக்கும் வரை ஜெர்மன் ஜனநாயக குடியரசின் குடிமகனாகவே வாழ்ந்தார். அவரது இறுதி ஆண்டுகளில் அடர் நாடகங்கள் எழுதாத போதும், நாடக இயக்கத்தை முன்னெடுப்பதிலும், புதிய தலைமுறையொன்றை உருவாக்குவதிலும் தனது நேரத்தையும் உழைப்பையும் செலவிட்டார். கற்பித்தலுக்கான நாடகங்கள் என்ற வகையில் மார்க்ஸிய சிந்தனையை முன்னெடுக்கும் குறு நாடகங்களையும் அவர் தயாரித்தார்.

பிரெக்ட் பற்றிய அவதூறுகள் சிலரால் இன்னமும் மேற்கில் பரப்பப்பட்டாலும், நவீன நாடகத்துறையில் அவருக்குரிய இடத்தை யாராலும் மறுக்க இயலாதுள்ளது. இன்றைய மக்கள் நாடக அரங்குகட்க்கும், பல்வேறு வெகுஜன புரட்சிகர அரங்குகட்க்கும் பிரெக்ட் ஒரு முன்னோடி என்று உறுதியுடன் கூறலாம். வழமையான நாடகத்துறையிலிருந்து அவர் ஏற்படுத்திய விலகல் முக்கியமானது. வழமையான நாடகங்கள் மேடை நிகழ்வுடன் அவையோர் ஒன்றிப் போவதையே நோக்கமாக்க் கொண்டிருந்த சூழலில், அவையோரை மேடை நிகழ்வினின்று தொலைவுபடுத்தி விலகி நிற்கச் செய்வதை பிரெக்ட்டின் “காவிய அரங்கு” முறை முதன்மைப்படுத்தியது. நாடகத்தின் நடுவே பாத்திரங்கள் அவையோரை விழித்து பேசுதல், பிரகாசமான மேடை ஒளி அமைப்பு, நாடகப் போக்கை இடைமறிக்கும் முறையில் புகுத்தப்படும் பாடல்கள் என்பன அந்த நோக்கஞ் சார்ந்த மேடை உத்திகள். விளக்கங்கூறும் விதமான சுலோக அட்டைகளைக் கூட பிரெக்ட் பயன்படுத்தினார் என்று கூறப்படுகிறது. பிரெக்ட் தனது நாடகச் சுவடிகளை தொடர்ந்து திருத்தங்கட்கு உட்படுத்தி வந்தார் என்பது நாடகம் பற்றிய அவரது அணுகுமுறைக்குரிய பண்பாகும்.

நன்மை வெல்லும் என்கிற விதமான நாடக முடிவுகளை பிரெக்ட்டிடம் காண்பது அரிது. தீமையும் அநீதியும் தான் வெல்லுகின்றன என்பதை காட்டுவதன் மூலம், நல்லதும் நீதியும் வேண்டுமாயின் உலகின் ஏற்கப்பட்ட நியதிகளை மாற்றவும் மறுக்கவும் வேண்டும் என்பதை பிரெக்ட் நேரடியாகவும் மறைமுகமாகவும் உணர்த்துவார்.

50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு குறிப்புகளை எழுதிய பிரெக்ட் அமெரிக்காவில் வாழ்ந்த ஏழாண்டுகளில் ஹாலிவுட் திரைப்படத் துறையால் முற்றாக ஓரங்கட்டப்பட்டார் என்பதும் கவனிக்கத்தக்க விடயமாகும். கலைஞன் அரசியலை விட்டு விலகி நின்றாலும், அரசியல் கலைஞனை விட்டு வைப்பதில்லை என்பதற்கு பிரெக்ட்டின் அமெரிக்க அனுபவம் ஒரு பயனுள்ள உதாரணம்.

பிரெக்ட் நாடகப்பிரதிகளை எழுதி, நாடகங்களை தயாரித்து Berliner Ensemble என்ற நாடகக் கம்பனியை அவரது இரண்டாவது மனைவியும் புகழ்பெற்ற நடிகையுமான ஹெலெனெ வைகெல் அவர்களுடன் சேர்ந்து நடத்தியவராவர். அதை விட நாடகம் பற்றிய கொள்கையை விருத்தி செய்ததிலும் அவருடைய பங்கு முக்கியமானது. நாடகவியல் பற்றி அவர் ஒன்பது நூல்களை வெளியிட்டுள்ளார்.

பிரெக்ட்டின் நன்கறியப்பட்ட இன்னெரு முகம் கவிதை சார்ந்தது. அவருடைய நாடகங்களில் வரும் பாடலகள் பலவும் கவித்துவம் மிக்கவை. அவற்றுக்கும் அப்பால் அவர் நூற்றுக்கணக்கான கவிதைகளையும் எழுதியுள்ளார். இட்துசாரி இலக்கியப் பரப்பில் பிரெக்ட்டின் கவிதைக்கட்கு முக்கியமானதொரு இடமுண்டு. கிழக்கு ஜெர்மன் அரசாங்கம் மக்கள் கிளர்ச்சி ஒன்றை தவறாக கையாண்ட போது, பிரெக்ட் அதை விமர்சிக்க தவறவில்லை. அவ்வாறு எழுதப்பட்ட ஒரு கவிதையைக் வைத்து பிரெக்ட்டுக்கும் ஸ்டாலினுக்கும் கடும் முரண்பாடு கற்பிக்கும் முயற்சிகள் இன்னமும் உள்ளன. பிரெக்ட் இறுதி வரை ஸ்டாலினினதும், சோவியத் ஒன்றியத்தினதும் நண்பனாகவே இருந்தார்.

கலை கலைக்காகவே என்ற கோஷத்தை நிராகரித்துக் கலைப் பண்பு குன்றாமல் அரசியல் தன்மை மிக்க ஆக்கங்களை உலகுக்கு வழங்கியவர் பிரெக்ட். சிங்கள நாடக இயக்கத்தின் எழுச்சி காலமான 1950 களின் பிற்கூற்றிற்கும், 1970 கட்குமிடையில், காக்கேசிய சுண்ண வட்டம், ஹுணு வட்டே கதாவ (சுண்ண வட்ட கதை) என்ற பேரில் தயாராகி வெற்றி பெற்றது. அக்கதை ஒரு குழந்தையின் மீதான உரிமை, பெற்றவளுக்கா, பேணி வளர்த்தவளுக்கா என்ற கேள்வியை எழுப்பி உழுபவனுக்கே நிலம் உடைமை என்ற நீதியை உணர்த்தி நின்றது.

கற்பித்தலுக்கான நாடகங்களில் ஒன்றான “விலக்கும் விதியும்” 1970 களில் ஈழத்தில் தமிழில் “யுகதர்மம்” என்ற பேரில் வர்க்க சமூகத்ஹ்டில் நீதியின் வர்க்க சார்பை உணர்த்தும் நாடகமாக வெற்றி பெற்றது. எனினும் தென்னாசியச் சூழலில் பிரெக்ட் பற்றிய அறிவும் அக்கறையும் மேலும் தேவை என்றே நினைக்கிறேன்.

கீழே காக்கேசிய சுண்ண வட்ட்த்தின் இறுதிக்காட்சியில் ஒரு பகுதியைத் தருகிறேன். தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் குழைந்தையை கைவிட்டு சென்றவளான ஒரு ஆளுநரின் மனைவிக்கும் குழந்தையைக் காப்பாற்றி தன் வறுமையின் நடுவே வளர்த்தெடுத்த மாளிகை பணிப் பெண் க்ருஷாவுக்குமிடையிலான வழக்கு, சந்தர்ப்ப சூழ்நிலையால் நீதிவானாக்கப்பட்ட அஸ்டாக்கின் முன்பு விசாரிக்கப்படுகிறது. அவ்வழக்கை எடுப்பதற்கு முன், இரு முதியவர்களின் மணமுறிவு வழக்கொன்றைப் பற்றிய தீர்ப்பை பின்னர் வழங்குவதாகக் கூறி விசாரணையை தொடர்கிறான். இப்போது க்ருஷாவை நோக்கிப் பேசுகிறான்.

அஸ்டாக் : (க்ருஷாவைத் தன்னிடம் அழைத்து, அவளை நோக்கி சற்று பரிவாக சரிந்தவாறு) உனக்கு நீதியைப் பற்றி கொஞ்சம் பரிவு இருப்பதை கவனித்தேன். இவன் உன் குழந்தையென்று நான் நம்பவில்லை. அப்படி அவன் உன் குழந்தையாக இருந்தால், பெண்ணே, நீ அவன் பணக்காரன் ஆவதை விரும்பமாட்டாயா? நீ மட்டும் அவன் உன் குழந்தை இல்லை என்று சொன்னால் அவனுக்கு ஒரு மாளிகையும் லாயங்களில் பல குதிரைகளும் அவன் வாசற்படிகளில் பல பிச்சைக்காரர்களும் அவனுக்கு பணியாற்ற படை வீர்ர்களும், அவனுடைய வீட்டு முற்றத்தில் பல மனுதாரர்களும் இருப்பர். இல்லையா? என்ன சொல்கிறாய்- இவன் பணக்காரனாவதை விரும்பவில்லையா?